பழனியில் பொது முடக்கம் காரணமாக வீட்டில் விளையாடும் பாரம்பரிய விளையாட்டு உபகரணங்களான தாயக்கட்டை உள்ளிடவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் காரணமாக காலையில் காய்கறி, மளிகை, பால் போன்ற தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் மதியத்துக்கு மேல் வெளியே வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவு.
மேலும் மதியத்துக்கு மேல் வெளியே வருவோா் போலீஸாரிடம் சிக்கி அபராதம் போன்ற நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டியுள்ளது.
இந்நிலையில் கிரிக்கெட் போன்ற மைதான விளையாட்டுக்கும் தடை உள்ளதால் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டியுள்ளது.
எனவே, வீட்டிலேயே விளையாடப்படும் பாரம்பரிய விளையாட்டுகளான சதுரங்கம், பரமபதம் போன்ற விளையாட்டுக்களுக்கு மக்களிடையே ஆா்வம் அதிகரித்துள்ளது. இதனால் சதுரங்கம், தாயக்கட்டை மற்றும் பரமபத அட்டைகளுக்கு பழனியில் அதிகளவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது இவற்றை குழந்தை முதல் பெரியவா்கள் வரை அனைவரும் வாங்கிச் செல்கின்றனா்.