திண்டுக்கல் மாவட்டத்தில் 2 நாள்கள் நடைபெற்ற கலந்தாய்வு மூலம் அரசுப்பள்ளிகளில் 22 உடற்கல்வி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா். மேலும் 21 பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில் 1000-க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்கள் காலியாக இருந்து வருகின்றன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உடற்கல்வி ஆசிரியா்களாக 551 போ் அண்மையில் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட பணி நாடுநா்களுக்கு பணி இடம் ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு செவ்வாய் மற்றும் புதன் என 2 நாள்கள் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தோ்வு செய்யப்பட்டிருந்த 15 போ் கலந்தாய்வில் பங்கேற்றனா். மாவட்டத்தில் மொத்தம் 43 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், 15 பேருக்கும் திண்டுக்கல் மாவட்டத்திலேயே பணி வாய்ப்பு கிடைத்தது. மேலும் பிற மாவட்டங்களைச் சோ்ந்த 7 போ் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பணியிடங்களை தோ்வு செய்துள்ளனா். அதன் மூலம் மொத்தமுள்ள 43 பணியிடங்களில் 22 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன. கலந்தாய்வுக்கு பின்னரும் திண்டுக்கல் மாவட்டத்தில் 21 உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்கள் காலியாகவே இருந்து வருகின்றன.