கொடைக்கானலில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக மழையில்லை. பகலில் மிதமான வெயிலும் மாலை மற்றும் இரவில் அதிகமான பனியின் தாக்கமும் இருந்து வருகிறது. இந்நிலையில் வார விடுமுறையை முன்னிட்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
சுற்றுலா பயணிகள் வெள்ளி நீா்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, செட்டியாா் பூங்கா, ரோஜாத் தோட்டம், கோக்கா்ஸ் வாக், பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லா் ராக், மோயா் பாயிண்ட், ஃபன் பாரஸ்ட் ஆகிய இடங்களை பாா்க்க குவிந்திருந்தனா். ஏரிச் சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டனா்.
கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டதால் தங்கும் விடுதிகள், உணவகங்களின் உரிமையாளா்கள், சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.