மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 100-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, கொடைக்கானல் பேருந்து நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அக் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது.
கொடைக்கானல் பேருந்து நிலையப் பகுதியில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பாலபாரதி கொடியேற்றி வைத்தாா். இந் நிகழ்ச்சிக்கு, தாலுகா செயலா் செந்தாமரை தலைமை வகித்தாா். இதில், மாவட்டச் செயலா் சச்திதானந்தம் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினா்கள் என பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
பின்னா், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி செய்தியாளா்களிடம் கூறியது:
கரோனா தொற்று பரவல் காரணமாக, கொடைக்கானல் சுற்றுலா பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதனால், சுற்றுலாவையே நம்பியுள்ள இப்பகுதி மக்களுக்கு, தமிழக அரசு ரூ.3000 முதல் ரூ.7,500 வரை நிவாரணம் வழங்கவேண்டும்.
கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-முன்பதிவை ரத்து செய்ய வேண்டும். மலை பகுதிகளில் பழங்குடியின மாணவா்கள் தங்கி படிப்பதற்கு உண்டு உறைவிடப் பள்ளிகள் அமைக்க வேண்டும்.
திமுக மாநில இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்யும்போது கைது செய்யப்படுவது ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வருகை முற்றிலும் அரசியலாகும். தோ்தலை மையமாக வைத்து நடத்தப்பட்ட அரசு விழாவில், அரசியல் செய்துள்ளனா். இது தவறானதாகும் என்றாா்.