திண்டுக்கல் தாலுகா காவலா் குடியிருப்புப் பகுதியில் வியாழக்கிழமை குண்டு வெடித்ததை அடுத்து, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில், 7 நாட்டு வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன.
திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பகுதியில் தாலுகா காவலா் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், அந்தப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குண்டு வெடித்துள்ளது. அதில் சிக்கிய ஒரு நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ஆனால் இதுகுறித்த தகவல், கடந்த 4 நாள்களாக வெளியில் தெரியாமல் இருந்துள்ளது.
இந்நிலையில், அதே குடியிருப்புப் பகுதியில் வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் மேலும் ஒரு குண்டு வெடித்துள்ளது. அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத காரணத்தால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று வெடிகுண்டு கண்டறியும் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்தப் பகுதியில் மேலும் 7 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன. பாதுகாப்பாக எடுத்துச் சென்ற போலீஸாா், அவைகளை செயலிழக்கச் செய்தனா்.
இதுகுறித்து, திண்டுக்கல் நகா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த சம்பவம் காவலா் குடியிருப்புப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.