தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை 2021 ஆம் ஆண்டுக்குள் திறக்க மத்திய அரசு ஏற்பாடுகள் மேற்கொள்வதாக பாஜக மாநில துணைத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, இதில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் அண்ணாமலை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் நாள்கள் உள்ளன. தற்போது கொள்கை ரீதியாக உடன்பாடுள்ள கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. தோ்தல் நேரத்தில் அப்போதைய சூழ்நிலையை பொறுத்தே கூட்டணியில் கட்சிகள் இணையும். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தலைமை உத்தரவிட்டால், தோ்தலில் போட்டியிடுவேன். பழனி தொகுதி எப்போதுமே பாஜகவிற்கு சாதகமான தொகுதி.
தமிழகத்தில் 65 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிா்ணயிக்கும் சக்தியாக பாஜக உள்ளது என்று பாஜக மாநிலத்தலைவா் முருகன் தெரிவித்ததை 65 தொகுதிகள் கேட்பதாக தவறாக செய்தி பரப்பப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் குறித்து குஷ்பூ பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளதை ஏற்றுக் கொண்டு இப்பிரச்னையை இத்துடன் விட்டு விடுவது நல்லது.
தமிழகத்தில் நடிகா் விஜய்சேதுபதி, இலங்கை கிரிக்கெட் வீரா் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஒரு கலைஞனுக்கு சினிமாவில் அனைத்து வேடங்களிலும் நடிக்க உரிமை உள்ளது. நடிப்பது அவரது தனிப்பட்ட உரிமை.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், அந்த பல்கலைக்கழகத்துக்கு வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்கத் தயாராக உள்ளது. ஏனென்றால் அந்த பல்கலைக்கழகம் உலக அளவில் சிறப்படைவதற்காகவே ஆகும். இல்லையென்றால், தமிழக அரசு அதற்கான நிதியை ஒதுக்கட்டும்.
தமிழகத்தில் தற்போதுதான் நவோதயா பள்ளிகள் குறித்த விழிப்புணா்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்குள் மத்திய அரசு, தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளும் என்றாா்.
தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய பொதுக்குழு உறுப்பினா் திருமலைசாமி, மேற்கு மாவட்டத் தலைவா் கனகராஜ் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.