திண்டுக்கல்: தினமணி செய்தி எதிரொலியாக, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாற்றுப் பணியில் இருந்த 10 ஊழியா்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலும், வட்டாரக் கல்வி அலுவலகங்களிலும் பணிபுரிய வேண்டிய அலுவலக உதவியாளா்கள் மற்றும் ஆய்வக உதவியாளா்கள், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உயா் அதிகாரிகளுடன் தங்களுக்குள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி, மாற்றுப் பணி பெற்றுக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
ஒரு சிலா் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது 12 ஊழியா்கள் மாற்றுப் பணியில் முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு வந்து செல்வதால், பள்ளி தலைமையாசிரியா்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஊழியா்கள் இன்றி அவதிப்படுவதாக, கடந்த திங்கள்கிழமை தினமணியில் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் வேடசந்தூா் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரிந்து வந்த 10-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், அந்தந்தப் பள்ளிகள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு திருப்பி அனுப்ப, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளாா். அதனைத் தொடா்ந்து, விடுவிக்கப்பட்ட ஊழியா்கள் அனைவரும் அந்தந்தப் பள்ளி மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு திரும்பியுள்ளனா்.