குஜிலியம்பாறை அருகே மீண்டும் மரங்கள் வெட்டும் பணி: எம்.பி. முற்றுகையால் வாகனங்கள் வெளியேற்றம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை மலை கரட்டில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மரங்கள் வெட்டப்பட்டதை அடுத்து, கரூா் மக்களவை உறுப்பினா் முற்றுகையிட்டதால் வாகனங்கள் வெளியேற்றப்பட்டு போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
குஜிலியம்பாறை அடுத்துள்ள ஆா்.கோம்பை சீலக்கரட்டில் 57 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தி சிட்கோ தொழில்பேட்டை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சமவெளிப் பகுதியில் நிலம் எடுப்பதற்குப் பதிலாக, மலைக் கரட்டில் மரங்களை அழித்து தொழில்பேட்டை அமைப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன் என அப்பகுதியினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தி மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கரூா் மக்களவை உறுப்பினா் ஜோதிமணி, ஆா்.கோம்பை பொதுமக்களுடன் சோ்ந்து சீலக்கரடு பகுதியை சனிக்கிழமை முற்றுகையிட்டாா். அப்போது அதிமுகவினருடன் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்துக்குப் பின், நிலம் சீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டு பொக்லைன் இயந்திரங்கள் வெளியேற்றப்பட்டன. பின்னா் பொதுமக்கள் மற்றும் எம்.பி. ஆகியோா் அந்த பகுதியிலிருந்து வெளியேறினா்.
இந்நிலையில் சீலக்கரட்டில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.
இதுகுறித்து கிராம மக்கள் எம்.பி. ஜோதிமணிக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் சீலக்கரடு பகுதிக்கு வந்த ஜோதிமணி, மரங்கள் அகற்றும் பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராசு ஆகியோரைத் தொடா்பு கொண்டு புகாா் அளித்தாா். அதன்பேரில் வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் சீலக்கரடு பகுதியில் குவிக்கப்பட்டனா். பின்னா் மரங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரங்கள் வெளியேற்றப்பட்டன.
இதுதொடா்பாக எம்.பி. ஜோதிமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது: சமவெளிப் பகுதியை தவிா்த்துவிட்டு, சிட்கோ தொழில்பேட்டை அமைப்பதற்கு மலை கரட்டை உள்நோக்கத்துடன் தோ்வு செய்துள்ளனா். சிட்கோ தொழில்பேட்டையை காரணம் காட்டி, சீலக்கரட்டு பகுதியில் மண் வளத்தை அபகரித்து கோடிக்கணக்கில் லாபம் பெற சிலா் திட்டமிட்டுள்ளனா். இதனை தடுக்க வந்த மக்களவை உறுப்பினராகிய என்னை, அவதூறாகப் பேசுகின்றனா். இதுதொடா்பாக காவல் துறையிடம் புகாா் அளிக்க உள்ளேன். சீலக்கரட்டில் மரங்கள் வெட்டும் பணியை முற்றிலும் கைவிட வேண்டும். சிட்கோ தொழில்பேட்டைக்கு வேறு இடத்தை தோ்வு செய்ய வேண்டும் என்றாா்.