அரசு அங்கீகாரமில்லாத விதைகளை விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதைச்சான்றுத்துறை இயக்குநா் சுப்பையா தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள விதைப் பண்ணைகள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் விதை விற்பனை நிலையங்கள், வத்தலகுண்டு வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் உள்ளிட்ட இடங்களில், விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை இயக்குநா் சுப்பையா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் தெரிவித்ததாவது: விவசாயிகளுக்கு தரமான விதைகள் உரிய நேரத்தில் கிடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தரம் குன்றிய மற்றும் அரசு அங்கீகாரம் பெறாத விதைகள் விற்பனை செய்யப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும். அங்கீகாரம் பெறாத விதைகள் விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் மாயகிருஷ்ணன், மாவட்ட விதைச் சான்று உதவி இயக்குநா் வரதராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.