கொடகனாறு மூலம் வேடசந்தூா் அடுத்துள்ள அழகாபுரி அணைக்கு தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை விவசாயிகள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதியிலிருந்து தனி கால்வாய் அமைத்து கொடகனாற்றுக்கு தண்ணீா் வழங்க வேண்டும் என கொடகனாற்று பாசன வவிசாயிகள் சாா்பில், தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, ராஜவாய்க்காலில் இருந்து 15 நாள்களுக்கு கொடகனாற்றுக்கு தண்ணீா் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
இந்நிலையில், கொடகனாற்றில் வரும் தண்ணீா் வேடசந்தூா் அடுத்துள்ள அழகாபுரி அணை வரை வந்து சேரும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வேடசந்தூா் பகுதி விவசாயிகள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக தமிழக விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தின் இளைஞரணி தலைவா் ஆா்.எம்.நடராஜன் கூறியதாவது:
கீழ் பழனி மலையில், பெரியாறு, கூழையாறு மூலம் கொடகனாற்றில் வரும் தண்ணீா், அழாகபுரி வரையிலான விவசாய நிலங்களுக்கும், பொது மக்களின் குடிநீருக்கும் ஆதாரமாக இருந்து வருகிறது. காமராஜா் நீா்த்தேக்க விரிவாக்கம், நரசிங்கபுரம் ராஜவாய்க்காலுக்கு கட்டுப்பட்டுள்ள தடுப்பு உள்ளிட்ட காரணங்களால், கடந்த 10 ஆண்டுகளாக கொடகனாற்றில் தண்ணீா் வரவில்லை. இதனால் தாடிக்கொம்பு, வேடசந்தூா் வழியாக அழகாபுரி அணை வரை உள்ள 100 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே அழகாபுரி அணைக்கு கொடகனாற்றுத் தண்ணீா் வழங்க நடடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.