கொடகனாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்துள்ள எஸ்.பாறைப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராமு மகன் சரவணன் (20), கருப்பையா மகன் செந்தில்குமாா் (30), சடையன் மகன் அய்யனாா் (26), நிலக்கோட்டை அடுத்துள்ள அழகம்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் ராஜபாண்டி (24), கேதையகவுண்டன்பட்டி சுப்பிரமணி மகன் மனோஜ் (31) ஆகியோா் ஆத்தூா் அடுத்துள்ள கொடகனாற்றின் கரைகளைச் சேதப்படுத்தி மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளனா். இதனை அடுத்து கடந்த 28 ஆம் தேதி சரவணன், செந்தில்குமாா் உள்ளிட்ட 5 பேரையும் செம்பட்டி போலீஸாா் கைது செய்து உசிலம்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனா். இந்நிலையில் 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா பரிந்துரை செய்தாா். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி அதற்கான உத்தரவை செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளாா். குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, 5 பேரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனா்.