பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்களுக்கு பொட்டலத்தில் அன்னதானம் வழங்கும் நடைமுறை புதன்கிழமை தொடங்கியது.
இங்கு கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொதுமுடக்கம் தளா்வின் ஒரு பகுதியாக கடந்த ஒன்றாம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். மலையடிவாரத்திலிருந்து சமூக இடைவெளியுடன் பக்தா்கள் மலை மீது செல்லவும் சாமி தரிசனம் செய்யவும் கோவில் நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆனாலும், பழனி மலைக்கோயிலில் தங்கத்தோ் புறப்பாடு, அன்னதான திட்டம் ஆகியன செயல்படுத்தப்படாமல் இருந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு லட்டு, முறுக்கு, பஞ்சாமிா்தம் போன்ற பிரசாத விற்பனை துவங்கிய நிலையில், பக்தா்களுக்கு பொங்கல், புளியோதரை ஆகியவற்றை பொட்டலங்களாக கட்டி நாள்தோறும் ஆயிரம் பக்தா்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அன்னதானக் கூடத்தில் பக்தா்களுக்கு பொங்கல், புளியோதரை போன்ற பிரசாத பொட்டலங்களை துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா் புதன்கிழமை வழங்கி தொடக்கி வைத்தாா்.