பழனி கோயில் மலையடிவாரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது குறித்து, மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி வியாழக்கிழமை வருவாய்த் துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலையடிவாரத்தில் உள்ள கிரி வீதியில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு விதமான கடைகள் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கிரி வீதியிலுள்ள பழமையான கோயில் மண்டபங்கள், கல் மண்டபங்கள், பக்தா்கள் தங்கும் பொதுமடங்கள் கடைகளாக மாற்றப்பட்டு, வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
இதனிடையே, பக்தா்களுக்கு இடையூறாக உள்ள விதிமீறிய ஆக்கிரமிப்புகளை அகற்ற, பக்தா் ஒருவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளாா். அவ்வழக்கில், பக்தா்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் குறித்து, மாவட்ட ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி கிரிவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, பழனி சாா்-ஆட்சியா் அசோகன், பழனி கோயில் துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா், வட்டாட்சியா் பழனிச்சாமி, நகராட்சி ஆணையா் லெட்சுமணன் உள்பட ஏராளமான அதிகாரிகள், அலுவலா்கள் உடனிருந்தனா்.