கொடைக்கானல் நகராட்சி வாகன நிறுத்துமிடம் மது பாரானது.
கொடைக்கானல் அண்ணாசாலைப் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான வாகனக் காப்பகம் உள்ளது. இந்தப் பகுதியில் காவல்நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், தினசரி மார்க்கெட், பத்திரப்பதிவு துறை மற்றும் முக்கிய அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் கடையும் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களுக்கு வரும் நபர்கள் தங்களது வாகனங்களை சாலைகளில் நிறுத்தியும், சிலர் அப் பகுதிகளிலுள்ள அலுவலகங்கள், கடைகளுக்கு முன் நிறுத்தி விட்டுச் செல்கின்றனர்.
இதனால் அண்ணாசாலைப் பகுதிகளிலும், பல்வேறு அலுவலகங்களிலும் பிரச்னை இருந்து வந்தது. இதனால் அப்பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு அண்ணாசாலைப் பகுதியிலும், குடியிருப்பு பகுதிகளிலும் நகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் கட்டண வாகன நிறுத்தம் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த கட்டண வாகன நிறுத்தத்தில் யாரும் வாகனங்களை நிறுத்துவதில்லை.
இதனால் அப்பகுதி குடிமகன்களின் மது பாராக மாறியுள்ளது. எந்நேரமும் நகராட்சிக்கு சொந்தமான வாகன கட்டண நிறுத்தம் குடிமகன்களின் பாராக நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் செல்லும் பொது மக்கள் தினமும் முகம் சுழித்து செல்கின்றனர். எனவே நகராட்சிக்கு சொந்தமான கட்டன வாகன நிறுத்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.