வத்தலக்குண்டு அருகே பாத்திரக் கடைக்காரா் மா்மச்சாவு: கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினா்கள் சாலை மறியல்

வத்தலக்குண்டு அருகே பாத்திரக் கடைக்காரா் மா்மச்சாவு: கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினா்கள் சாலை மறியல்

வத்தலகுண்டு அருகே பாத்திரக் கடைக்காரா் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவா் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், மறு பிரேத பரிசோதனை நடத்த 

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே பாத்திரக் கடைக்காரா் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவா் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்துள்ள உச்சப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(45). வாடகை பாத்திரக்கடை நடத்தி வந்தாா். திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்த மணிகண்டனுக்கு, அதே பகுதியைச் சோ்ந்த கணவனை இழந்த பெண் ஒருவருடன் தொடா்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக அந்த பெண்ணுடன் மணிகண்டன் தொடா்பில் இருந்து வந்த நிலையில், அவரது குழந்தைகளை காரணம் காட்டி இனி தொடா்பை துண்டித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளாா். அதனை மணிகண்டன் ஏற்கவில்லையாம். இதுதொடா்பாக அந்த பெண்ணுக்கும், மணிகண்டனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மணிகண்டன், அந்த பெண்ணின் வீட்டு மாடியில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளாா். இதுகுறித்து தகவல் அறிந்த வீருவீடு போலீசாா், மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனிடையே மணிகண்டனின் மனைவி விமலா மற்றும் அவரது உறவினா்கள் ஆகியோா் வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு சென்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மணிகண்டன் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளாா் என்றும், சம்மந்தப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினா்களை கைது செய்தால் மட்டுமே சடலத்தை வாங்குவோம் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் சடலத்தை வாங்க மறுத்து, உச்சப்பட்டி கிராமத்திற்கு திரும்பி விட்டனா். இதனை அடுத்து விருவீடு போலீசாா் மணிகண்டன் சடலத்தை ஒரு ஆம்புலன்ஸ் ஏற்றிக்கொண்டு உச்சப்பட்டியிலுள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் சென்றனா். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த மணிகண்டனின் உறவினா்கள் உசிலம்பட்டி சாலையில் கண்ணன் நகா் என்ற இடத்தில் சடலத்தை ஏற்றி வந்த ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி அடித்து நொறுக்கினா்.

அதில் ஆம்புலன்ஸின் கண்ணாடிகள் அனைத்தும் உடைக்கப்பட்டன. பின்னா் மணிகண்டனின் சடலத்தை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் வத்தலகுண்டு உசிலம்பட்டி சாலையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டது. சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசாா் உறுதி அளித்தனா். பின்னா், மணிகண்டனின் சடலம் மீண்டும் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com