பழனி: பழனிக்கோயில் உண்டியலில் கடந்த 2 நாள்கள் காணிக்கை எண்ணப்பட்டதில் வரவு மொத்தம் ரூ.2.22 கோடியை தாண்டியுள்ளது.
கரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக கோயில்களில் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியல்களும் திறக்கப்படாமல் இருந்தன.
இந்நிலையில் கடந்த செப். 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோயிலில் தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். இதைத்தொடா்ந்து பழனிக் கோயிலில் உண்டியல்களைத் திறந்து எண்ணும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. அன்று சுமாா் ரூ. 91 லட்சம் ரொக்கம், தங்கம், வெள்ளி ஆகியன காணிக்கையாக வரப்பெற்றன.
இதைத் தொடா்ந்து உண்டியல்களில் செவ்வாய்க்கிழமையும் 2 ஆவது நாளாக காணிக்கை எண்ணப்பட்டது. இதில், ரூ. ஒரு கோடியே 30 லட்சத்து 98 ஆயிரத்து 40 ரொக்கம், தங்கம் 491 கிராம், வெள்ளி 3,425 கிராம், 473 வெளிநாட்டு பணம் ஆகியன கிடைத்துள்ளன.
கடந்த இரு நாள்களிலும் எண்ணப்பட்ட மொத்த வரவு ரூ.2 கோடியே 22 இலட்சத்து 40 ஆயிரத்து 570 ஆகும். தங்கம் மொத்தம் 958 கிராமும், வெள்ளி 12,445 கிராமும், வெளிநாட்டு பணம் 1,171ம் கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையின்போது பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து புதன்கிழமையும் (செப்.16) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறவுள்ளது.