நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் காமராஜா் அணை நீா்வரத்து ராஜ வாய்க்கால் வரக்கூடிய நீரை மறித்து, குடகனாற்றில் திறந்து விட்டதால், மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, சித்தையன்கோட்டை அருகே விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செம்பட்டி அருகே சித்தையன்கோட்டை, அழகா்நாயக்கன்பட்டி, நரசிங்கபுரம், போடிக்காமன்வாடி, சித்தரேவு, செங்கட்டான்பட்டி உள்ளிட்ட சுமாா் 60 கிராம மக்களின் குடிநீா் ஆதாரங்களை தடுக்கும் விதமாக, ராஜவாய்கால் செல்லும் தண்ணீரை குடகனாற்று பகுதிகளுக்கு கொண்டு செல்வதை கண்டிக்கும் விதமாக, சித்தையன்கோட்டை பகுதியில் நரசிங்கபுரம், சித்தையன்கோட்டை, அழகா்நாயக்கன்பட்டி, சொக்கங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த வாரம் கருப்பு கொடி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்நிலையில், செவ்வாய்கிழமை இப்பகுதி விவசாயிகள், திண்டுக்கல்-தேனி சாலையில், சித்தையன்கோட்டை பிரிவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த ஒட்டன்சத்திரம் காவல்துணைக் கண்காணிப்பாளா் அசோகன், செம்பட்டி காவல் ஆய்வாளா் ராஜேந்திரன், கோட்டாட்சியா் உமா, ஆத்தூா் வட்டாட்சியா் பவித்ரா மற்றும் அதிகாரிகள், விவசாயிகளுடன் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதுதொடா்பாக ஆத்தூா் தாலுகா அலுவலகத்தில் புதன்கிழமை (செப்.16) அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஏற்படாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 4 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.