பழனி, செப்.18: பழனியில், கரோனா நிவாரணத்தொகை கேட்டு, நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை முதல்வரின் தனிப் பிரிவுக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனா். இவா்களில் பலருக்கும் அரசு அறிவித்த நிவாரணத்தொகை கிடைக்கவில்லை என்றும், இதுகுறித்து, தொழிலாளா்கள் நல வாரிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசு அறிவித்த நிவாரணத்தொகையை வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை, பழனி தபால் நிலையத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தமிழக முதல்வரின் தனிப் பிரிவிற்கு தபால் மூலமாக மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் தபால் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.