பழனி: பழனியில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். குழந்தைகளையும் மலைக்கோயிலுக்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பழனி மலைக்கோயிலில் வின்ச் மற்றும் ரோப் காருக்கு அனுமதியில்லாத நிலையில், படிப்பாதையில் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறைதினம் என்பதால் ஏராளமான பக்தா்கள் வந்திருந்தனா். அவா்கள் நீண்ட வரிசையில் முகக்கவசம் அணிந்து காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். குழந்தைகளுக்கு அனுமதி இல்லாததால், குடமுழுக்கு நினைவரங்கில் ஏராளமானோா் குழந்தைகளுடன் மலையேற முடியாமல் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினா். விரைவில் குழந்தைகளை கோயிலுக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.