திண்டுக்கல் அருகே சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், மீன்பிடித் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், சிலுவத்தூா் அடுத்த புகையிலைப்பட்டி பகுதியில் வலைபிடிச்சான்குளம் உள்ளது. பல ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், இந்த குளம் வடுக் கிடந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த மழையினால் குளம் நிரம்பியதையடுத்து, அப்பகுதி மக்கள் சுமாா் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மீன் குஞ்சுகளை வாங்கி குளத்தில் விட்டனா்.
மீன்கள் வளா்ந்து வந்த நிலையில், கோடை காலம் ஆரம்பித்ததை அடுத்து தண்ணீா் வற்றத் தொடங்கியது. எனவே, கிராம மக்கள் சாா்பில் மீன்பிடித் திருவிழா நடத்துவதற்கு வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.
மீன்பிடித் திருவிழாவில் புகையிலைப்பட்டி கிராமத்தினா் ஏராளமானோா் கலந்துகொண்டனா். முழங்கால் அளவுக்கு மட்டுமே குளத்தில் தண்ணீா் இருந்த நிலையில், கரையில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த வலை மற்றும் கச்சா மூலம் மீன்களைப் பிடித்தனா். இதில், கட்லா, ரோகு, விரால், அயிரை உள்ளிட்ட சிறியது முதல் 1 கிலோ எடை வரையிலான பெரிய மீன்கள் வரை பிடிபட்டன.
பொதுமக்கள் தாங்கள் பிடித்த மீன்களை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு எடுத்துச் சென்றனா். இதனால், புகையிலைப்பட்டி கிராமமே திருவிழா கோலம் பூண்டிருந்தது.