பழனியில் கரோனா தொற்று பரவி வருவதால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தோ்தலுக்கு முன்பிருந்தே கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் தனி வாா்டு தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை, அண்ணாநகரில் ஓய்வுபெற்ற பேராசிரியா் ஒருவரும், நெய்க்காரபட்டியில் தொழிலதிபா் ஒருவரும் காய்ச்சல் பாதித்த 2 நாள்களில் உயிரிழந்தனா். இதனால், அப்பகுதி பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும், பேருந்து நிலையம், அடிவாரம், உழவா் சந்தை உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் அஜாக்கிரதையாக சென்று வருகின்றனா்.
மேலும், பல நிறுவனங்களில் கை சுத்திகரிப்பான் உள்ளிட்ட எந்த நடைமுறையும் பின்பற்றப்படுவதில்லை. எனவே, நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினா் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என சமூகநல ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.