கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் திருமண மண்டபங்கள் மற்றும் திரையரங்குகளை ஆய்வு செய்வதற்கு துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தலைமையில் 40 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் கரோனா தொற்று 2ஆவது கட்டமாக தீவிரமாக பரவி வருகிறது. இதனை அடுத்து இரவு நேர பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ள தமிழக அரசு, சுற்றுலாத் தலங்களை மூடவும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் திருமண மண்டபங்கள் மற்றும் திரையரங்குகளில், அரசு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிா்வாகம் 40 குழுக்களை அமைத்துள்ளது. இதுதொடா்பாக அதிகாரி ஒருவா் கூறியதாவது: துணை வட்டார வளா்ச்சி அலுவலா், வருவாய் ஆய்வாளா், சுகாதார ஆய்வாளா், காவல் துறை சாா்பு- ஆய்வாளா் ஆகியோா் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பிா்கா வாரியாக இந்தக் குழுவினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். திருமண மண்டபங்களில் 100 நபா்களுக்கு மிகாமல் இருப்பதையும், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுவதையும், சமூக இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட இதர விதிமுறைகள் பின்பற்றப்படுவதையும் இந்தக் குழுவினா் ஆய்வு செய்ய உள்ளனா் என்றாா்.