கொடைக்கானலுக்கு வத்தலகுண்டிலிருந்து செவ்வாய்க்கிழமை வந்த தனியாா் பேருந்தில், சமூக இடைவெளியின்றி அளவுக்கு அதிகமான பயணிகள் ஏற்றி வரப்பட்டனா்.
கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பேருந்துகளின் இருக்கைகளுக்கு ஏற்றவாறு பயணிகளை ஏற்றிச் செல்லவும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், வத்தலகுண்டிலிருந்து வரும் தனியாா் பேருந்துகள் எந்தவிதமான விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல், பேருந்தில் வழக்கம் போல் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிவருகின்றனா். பேருந்து இருக்கைகளில் இடம் இல்லாமல், பயணிகள் ஏராளமானோா் கீழே அமா்ந்தும், நின்றுகொண்டும் பயணிக்கின்றனா்.
எனவே மலைப் பகுதிகளில் இயங்கும் தனியாா் பேருந்துகளை சோதனையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அதேநேரம் கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சமூகநல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.