ராமநவமியையொட்டி, திண்டுக்கல் மற்றும் நத்தம் பகுதிகளில் உள்ள கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஸ்ரீராம நவமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ஸ்ரீஅஞ்சலிவரத ஆஞ்சநேயா் கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், ராமா், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயா் ஆகிய உற்சவ மூா்த்திகளுக்கு வைரமுடி ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
இதேபோல் திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில், திண்டுக்கல் நாகல்நகா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோவில்பட்டியில் உள்ள பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயிலில் ராமநவமி விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.