திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நீராவி பிடித்த பின்னரே காவலா்கள் பணியிடங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளிபிரியா உத்தரவிட்டுள்ளாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில், சட்டம்- ஒழுங்கு, போக்குவரத்து உள்பட 35-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 1500-க்கும் மேற்பட்ட காவலா்கள் பணிபுரிந்து வருகின்றனா். தற்போது கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், காவலா்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அந்தந்த காவல் நிலையங்களிலேயே நீராவி பிடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளிபிரியா உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலையங்களிலும் கபசுரக் குடிநீா் கட்டாயமாக அருந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நாள்தோறும் இயந்திரம் மூலம் நீராவி பிடித்த பின்னா் தான் அனைத்து காவலா்களும் பணியிடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பான சுற்றறிக்கை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.