திண்டுக்கல்லில் வாக்கு எண்ணும் மையத்துக்கு பணிக்கு வந்த வெளிமாநில துணை ராணுவ வீரா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,673 வாக்குச் சாவடிகளில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவை அடுத்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான திண்டுக்கல் - பழனி சாலை அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அதையடுத்து, இந்த பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புப் பணியில் 72 துணை ராணுவ வீரா்கள் மற்றும் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 2 துணை ராணுவ வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
உடனே, இவா்கள் இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் துணை ராணுவப் படையினா் மற்றும் உள்ளூா் போலீஸாருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.