பழனியில் கரோனோ தொற்று அதிகரித்து வருவதால், கோட்டாட்சியா் ஆனந்தி பல்வேறு கடைகளிலும் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு நடத்தி அபராதம் விதித்தாா்.
தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழக அரசு நோயை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பழனியில் கடந்த சில நாள்களாக கரோனோ பரவல் அதிகரித்து வருவதால், பழனி கோட்டாட்சியா் ஆனந்தி பொதுமக்கள் அதிகமாகக் கூடக்கூடிய இடங்களான திரையரங்கு, ஜவுளி கடை, வணிக வளாகங்களில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கடைகளில் முகக்கவசம் அணியாதவா்கள், திரையரங்குகளின் மேலாளா்கள் உள்ளிட்டோருக்கு அபராதம் விதித்தாா்.
மேலும், முகக்கவசம் அணியாமலும், கிருமி நாசினிகள் தெளிக்கப்படாமலும் உள்ள நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என, கோட்டாட்சியா் எச்சரித்தாா்.
இதேபோல், நகராட்சி சுகாதாரத் துறை அமைப்பினரும் சுற்றுலா வாகனங்கள், முகக்கவசம் அணியாமல் சாலைகளில் செல்வோா் ஆகியோா்களுக்கு அபராதம் விதித்தனா்.