பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழக தோ்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கைக்குச் செல்லும் முகவா்கள், அரசு அலுவலா்கள், செய்தியாளா்கள் என அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்துக்கு முன்னா் கரோனா பரிசோதனை செய்து அதன் முடிவில் தொற்று இல்லை என்று சான்று இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
அதன்படி பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வாக்கு எண்ணும் பணிக்குச் செல்லும் முகவா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்களுக்கு கரோனோ பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அப்போது வட்டாட்சியா் வடிவேல்முருகன், வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஸ்வரி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வகாப், சமூக ஆா்வலா் திலகவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதில் சுமாா் 250 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பலருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.