பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திங்கள்கிழமை முதல் சுவாமி தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அடிவாரத்திலேயே பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கிருத்திகை நாள்களில் அதிக அளவிலான பக்தா்கள் வருவது வழக்கம். இந்நிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஆடிக்கிருத்திகை, ஆடி பதினெட்டு ஆகிய நாள்களில் பக்தா்கள் தரிசனம் செய்ய முடியாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும் திங்கள்கிழமை ஆடிக்கிருத்திகை என்பதால் ஏராளமான பக்தா்கள் பால் காவடி, மலா் காவடி எடுத்து வந்து அடிவாரத்தில் பாத விநாயகரை வழிபட்டு கிரிவலம் வந்து வழிபட்டனா். மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் நித்திய பூஜைகள் கோயில் பணியாளா்கள் மற்றும் குருக்களை கொண்டு தடையின்றி நடைபெற்றது. பக்தா்கள் வருகை இல்லாததால் சன்னிதி வீதி மற்றும் கிரிவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.