கொடைக்கானலில் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாகக் கூறி பணியாளா்களுடன் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தகராறில் ஈடுபட்டனா்.
கொடைக்கானலில் பல பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு பகுதிகளிலும் நகராட்சி சாா்பில் தாா் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கொடைக்கானல் அருகே செண்பகனூா்-பிரகாசபுரம் சாலை அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது பைரவா் கோயில் பகுதியைச் சோ்ந்த சிலா் சாலை தரமாக அமைக்கவில்லை எனக் கூறி பணியாளா்களுடன் தகராறில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத்தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.