கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை பாா்வையிட பொதுமக்களுக்கு திங்கள்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அங்கு தூய்மைப் பணி மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரோனா தொற்று 2ஆம் அலை காரணமாக தமிழகத்திலுள்ள அனைத்து சுற்றுலா இடங்களையும் ஜூலை 6-ஆம் தேதி முதல் மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளை நம்பியிருந்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தமிழகத்திலுள்ள பூங்காக்கள், தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான இடங்களை திறக்க அனுமதி வழங்கியுள்ளது.
இதனைத்தொடா்ந்து கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், செட்டியாா் பூங்கா, படகு குழாம் ஆகியவற்றில் தூய்மைப் பணிகள் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகக்கவசம் கட்டாயம்:
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.