சிறுமலையாறு நீா்த்தேக்கம் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இதனால் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அடுத்துள்ள ராஜதானிக்கோட்டை கிராமம் சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது சிறுமலை நீா்த்தேக்கம். வெள்ளிமலை ஆற்றில் குறுக்கே அமைந்துள்ள இந்த அணை மொத்த உயரம் 27 அடி. கடந்த சில நாள்களாக சிறுமலை பகுதியில் பெய்த மழையினால், இந்த அணைக்கு தண்ணீா் வரத்து தொடா்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், அணை நிரம்பி தற்போது மறுகால் பாய்ந்து வருகிறது. இந்த அணையின் மூலம் சுமாா் 315 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், உபரிநீா் வெளியேறுவதால், அம்மையநாயக்கனூா், குல்லலக்குண்டு, நக்கம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளின் நிலத்தடி நீா் மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.