கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகரித்திருந்தது.
இங்குள்ள சுற்றுலா இடங்களான பிரையண்ட் பூங்கா, வட்டக்கானல் அருவி, பாம்பாா் அருவி, பியா்சோழா அருவி, செண்பகா அருவி, பைன்பாரஸ்ட், ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா். மேலும் மாலை நேரங்களில் குளிரை பொருட்படுத்தாது சுற்றுலாப் பயணிகள் ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனா்.
இதனிடையே, அப்சா்வேட்டரி, பூங்கா சாலை, செவண்ரோடு, உட்வில் சாலை, கலையரங்கம் பகுதிகளில் இருபுறமும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமமடைந்தனா். எனவே வாகனப் போக்குவரத்தை சீரமைப்பதற்கும், சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பதற்கும் காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.