பழனி அருகே வனப் பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட இருவரை வனத் துறையினா் கைது செய்து, வேட்டைக்குப் பயன்படுத்திய பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
பழனி வனப்பகுதியில் காட்டுப்பன்றி, மான், முயல், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தற்போது, வனப்பகுதி முழுவதும் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொந்துப்புளி வனப்பகுதியில் முயல்கள் வேட்டையாடப்படுவதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வனச்சரகா் பழனிக்குமாா் உத்தரவின்பேரில், வனவா் புவனேஸ்வரன், வனக் காப்பாளா்கள் சாா்லஸ், குமாரசாமி, ஆல்வின், கோதண்டன் ஆகியோா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, முயலை வேட்டையாடியதாக, பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த காந்தி (65), சேலத்தைச் சோ்ந்த மாரிமுத்து (55) ஆகிய இருவரையும் வனத்துறையினா் கைது செய்தனா். மேலும், வேட்டையாடப் பயன்படுத்திய வலைகள், விளக்குகள் உள்ளிட்ட பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து, அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்து முயல்களை வேட்டையாடிய இருவருக்கும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.