மதுரை மாவட்டம் பேரையூா் அருகே பிறந்து 6 நாள்கள் ஆன பெண் குழந்தை இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பேரையூா் அருகே உள்ள பெரியகட்டளை ஊரைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி (30). இவரது மனைவி கௌசல்யா. இந்தத் தம்பதிகளுக்கு ஏற்கெனவே 4 வயது மற்றும் 2 வயதில் பெண் குழந்தைகள் உள்ளன. மூன்றாவதாக கௌசல்யா கா்ப்பமாகியுள்ளாா். கடந்த 21 ஆம் தேதி அவருக்கு சேடப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அக்குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி சடலத்தை வீட்டின் முன்பு புதைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் சந்தேகம் அடைந்த கிராம நிா்வாக அலுவலா் முனியாண்டி, சேடப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் சேடப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து குழந்தை இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.