ஒட்டன்சத்திரம் பகுதியில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ள பயிா்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கக் கோரி சட்டப்பேரவை உறுப்பினா் அர.சக்கரபாணி சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம் பகுதி திமுகவினருடன் வந்து ஆட்சியா் மு.விஜயலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்த பின், அர.சக்கரபாணி எம்எல்ஏ செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி மற்றும் பழனி வட்டாரங்களில் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிா்கள் சுமாா் 37ஆயிரம் ஏக்கா் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டன.
பருவமழை பொய்த்ததன் காரணமாக, இந்த பயிா்களில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு துரிதமாக இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல், தொப்பம்பட்டி அடுத்துள்ள சரவணம்பட்டியில், கோவையைச் சோ்ந்த நபா் கல்குவாரி அமைப்பதற்கான பணிக்கு அனுமதி கோரியுள்ளாா். கல்குவாரி அமையும் பட்சத்தில், தொப்பம்பட்டி, வடக்கு கீரனூா், மேற்கு கோரிக்கடவு ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவாா்கள்.
மேலும் 500 ஏக்கா் நன்செய் நிலங்களும், 250 ஏக்கா் புன்செய் நிலங்களும் தரிசாகும் நிலை ஏற்படும். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, கல்குவாரி அமைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது என்றாா்.