கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
கொடைக்கானலில் கடந்த 10-நாள்களுக்கு மேலாக பகலில் கடுமையான வெயிலும் இரவு நேரங்களில் அதிகமான குளிரும் நிலவுகிறது. இதனால் வனப்பகுதிகளிலுள்ள மரங்கள்,செடிகள் கருகியுள்ளன. இந்நிலையில் கொடைக்கானல் அருகே பெருமாள்மலை தென்னங்கவை வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. காற்றும் வேகமாக வீசியதால் இப்பகுதியில் அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் ஆகியவை எரிந்து சேதமடைந்தன. இதனைத் தொடா்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினா் சென்று இலை தளைகளைக் கொண்டு தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். இந்த காட்டுத்தீயால் இப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக வன ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.