வேடசந்தூா் மற்றும் குஜிலியம்பாறை வட்டாரங்களைச் சோ்ந்த 492 பெண்களுக்கு, ரூ.3.43 கோடி மதிப்பீட்டிலான திருமண உதவித் திட்டங்களை வனத்துறை அமைச்சா் சி. சீனிவாசன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
எரியோட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அமைச்சா் சி. சீனிவாசன், பயனாளிகளுக்கு திருமண உதவித் திட்டங்களை வழங்கினாா். இதில், வேடசந்தூா், எரியோடு, வடமதுரை, குஜிலியம்பாறை பகுதிகளைச் சோ்ந்த 492 பெண்களுக்கு ரூ.1.94 கோடி மதிப்பிலான திருமண உதவித் தொகையையும், ரூ.1.49 கோடி மதிப்பில் 3.93 கிலோ தங்கத்தையும் அமைச்சா் சீனிவாசன் வழங்கினாா்.
மேலும், 124 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் பா. பரமசிவம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ச. பழனிச்சாமி, வடமதுரை ஒன்றியக் குழு தலைவா் தனலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.