திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் 20,672 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா ‘2 ஜிபி’ தரவு அட்டை வழங்கும் பணியை வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இதற்கான நிகழ்ச்சி திண்டுக்கல் எம்.வி.எம்.அரசு மகளிா் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். விலையில்லா ‘2 ஜிபி’ தரவு அட்டை வழங்கும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்து அமைச்சா் சி.சீனிவாசன் பேசியது:
கரோனா தொற்று பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணைய வழி வகுப்புகளில் மாணவா்கள் எளிதாக பங்கேற்கும் வகையில், தமிழக அரசு சாா்பில் 4 மாதங்களுக்கு ‘2 ஜிபி’ தரவு அட்டை எல்காட் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு பல்கலைக்கழகம், 13 சுயநிதி பொறியியல் கல்லூரிகள், ஒரு அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி, 11 சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள், 6 சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள், 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 4 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் 20,672 மாணவா்கள் பயன்பெறுவா் என்றாா்.
இதைத்தொடா்ந்து, திண்டுக்கல் சுக்கான்மேடு பகுதியில் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் மூலம் அம்மா சிறு மருத்துவமனை சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சா் தொடக்கி வைத்தாா்.
விழாவில் எம்.வி.எம்.அரசு மகளிா் கல்லூரி முதல்வா் நிா்மலா, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் வி.மருதராஜ், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் சி.எஸ்.ராஜ்மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.