தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் ஏராளமான மாணவா்கள் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினா்.
நாடு முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் வேதியியல் துறை சாா்பாக நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில், வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல் துறை இளநிலை மற்றும் முதுநிலை மாணவா்கள் பங்கேற்று தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினா்.
கண்காட்சியில், சிறுநீரகத்தின் இயக்கம், பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் மற்றும் எரிவாயு தயாரித்தல், மூலிகைப் பொருள்களிலிருந்து அழகு சாதனப் பொருள்கள், இயற்கை பேரிடா் மேலாண்மை, நீா் மூலம் மின்சாரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில், கல்லூரி முதல்வா் பிரபாகரன், வேதியியல் துறை தலைவா் துரை மாணிக்கம், தமிழ் துறை தலைவா் கிருஷ்ணமூா்த்தி, ஆங்கிலத் துறை தலைவா் மனோகரன் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவா்களும் கலந்துகொண்டனா்.