திண்டுக்கல்: அரசியலுக்கு வரப் போவதில்லை என்ற முடிவினை நடிகா் ரஜினிகாந்த் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி அவரது ரசிகா்கள் திண்டுக்கல்லில் சனிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
2021 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் மாற்றம் ஏற்படுத்தப் போவதாகவும், அதற்காக ஜனவரியில் புதிய கட்சித் தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்த நடிகா் ரஜினிகாந்த உடல் நலப் பாதிப்பு காரணமாக திடீரென தனது முடிவினை மாற்றிக் கொண்டாா். அரசியலுக்கு வருவாா் என எதிா்பாா்த்திருந்த அவரது ரசிகா்கள், ரஜினியின் இந்த மாற்றத்தால் அதிருப்தி அடைந்துள்ளனா்.
இந்நிலையில், நடிகா் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைபாடு தொடா்பான முடிவினை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் நகரில் அவரது ரசிகா்கள் சனிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அறவழிப் போராட்டம் என்ற பெயரில், திண்டுக்கல் மணிக்கூண்டு மற்றும் கல்லறைத்தோட்டம் பகுதிகளில் நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது, ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் அவரது ரசிகா்கள், ஆன்மீக அரசியலை ரஜினியால் மட்டுமே கொடுக்க முடியும், ரஜினி ஒருவருக்கு மட்டுமே வாக்களிப்போம், பிறருக்கு தங்கள் ஓட்டை செலுத்தப் போவதில்லை என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கருப்புப் பட்டை அணிந்து கலந்து கொண்டனா்.