பழனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் நலச்சங்கம் சாா்பில் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: பழனியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் திண்டுக்கல் சாலையில் உள்ள கட்டடத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவா்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும்போது மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது.
தற்போது பழனியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டுப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து 6 மாதங்கள் ஆகி விட்டன. ஆனால் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவராமல் இருப்பது மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவா்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உடனடியாக புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.