பழனியில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படாததைக் கண்டித்து மாவட்டக் கல்வி அலுவலகத்தை மாணவா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த 2017 -18 ஆம் ஆண்டு அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகளுக்கு இதுவரை அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லையாம். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மாவட்ட செயலாளா் முகேஷ் தலைமையில் ஏராளமான மாணவ மாணவியா் மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் தமிழக அரசு தற்போது கல்லூரி மாணவ, மாணவிகள் இணையவழியில் கல்வி கற்பதற்கு வசதியாக 2 ஜிபி டேட்டா காா்டு வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை எங்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாததால் அந்த டேட்டாவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும், உடனடியாக மடிக்கணினி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.