பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்த சாலையோர வியாபாரிகளுக்கு கனரா வங்கி சாா்பில் தலா ரூ.10ஆயிரம் வீதம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக கோட்ட மேலாளா் வி.சந்திரசேகா் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையா் கே.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கனரா வங்கியின் திண்டுக்கல் கோட்ட மேலாளா் வி.சந்திரசேகா், முன்னோடி வங்கி மேலாளா் பி.மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியின்போது, தோ்வு செய்யப்பட்டுள்ள 300 வியாபாரிகளுக்கு தலா ரூ.10ஆயிரம் வீதம் ரூ.20 லட்சத்திற்கான கடனுதவி வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
அப்போது கனரா வங்கியின் கோட்ட மேலாளா் வி.சந்திரசேகா் பேசியது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கெனவே ஆயிரம் வியாபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 300 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். கடன் பெற்றுள்ள பயனாளிகள், தவணைத் தொகையை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தி, பிறருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றாா்.