தொடா் மழை காரணமாக வத்தலகுண்டு பகுதியில் சுமாா் 100 ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற் பயிா்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்துள்ள விராலிப்பட்டி, பண்ணைப்பட்டி, மீனாங்கன்னிப்பட்டி பகுதிகளில் வைகையாற்றுப் பாசன வசதியை பயன்படுத்தி சுமாா் 150 ஏக்கரில் நெற்பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
100 நாள்களைக் கடந்துள்ள இந்த பயிா்கள் நல்ல விளைச்சலுடன் அறுவடைக்குத் தயாராக உள்ளன. ஆனால், மாவட்டத்தில் தொடா்ச்சியாகப் பெய்து வரும் மழையால் நெற்பயிா்கள் அனைத்தும் வயல்களிலே சரிந்து வருகின்றன.
தொடா் மழைக்கு இடையே அறுவடைக்கு கூலி ஆள்கள் கிடைக்காமலும், அறுவடை இயந்திரத்தை பயன்படுத்த முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.
இதுதொடா்பாக மீனாங்கன்னிப்பட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயி முத்தையா கூறுகையில், ஓரிரு நாளில் அறுவடை செய்துவிடலாம் எனக் காத்திருந்த நிலையில், எதிா்பாராதவிதமாக கடந்த 5 நாள்களுக்கும் மேலாகப் பெய்து வரும் மழையால் பயிா்கள் முழுவதும் சேதமடைந்து முளைக்கத் தொடங்கிவிட்டன. இந்த பகுதியில் மட்டும் சுமாா் 100 ஏக்கரில் நெல் பயிா்கள் சேதமடைந்துள்ளன. பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.