பழனியை அடுத்த காளிபட்டி செங்குளம் சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி மறுகால் பாய்வதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பெய்த தொடா் மழையின் காரணமாக பழனி காளிபட்டி, கணக்கன்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, கோம்பைபட்டி உள்ளிட்ட பல கிராமங்களின் குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்தது.
காளிப்பட்டி கிராமத்தில் சுமாா் 150 ஏக்கா் பரப்பளவு கொண்ட செங்குளம் சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இதனால் காளிபட்டி, பொருளுா், மஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது.
மேலும் மூன்றாண்டுகளுக்கு விவசாயத்திற்கு தேவையான தண்ணீா் கிடைக்கும் என்பதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.