திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் குவின்டால் ரூ.6 ஆயிரம் என்ற விலையில், விவசாயிகளிடமிருந்து உளுந்து கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசின் விலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், 2020-21ஆம் ஆண்டு ராபி பருவத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்து கொள்முதல் செய்யப்பட உள்ளது.
நடப்பு ராபி பருவத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் 5,828 ஏக்கரில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மற்றும் பழனி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் குவின்டால் ரூ.6 ஆயிரம் என்ற விலையில் உளுந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
கொள்முதல் செய்யப்பட உள்ள உளுந்து, நியாயமான சராசரி தரத்தின்படி ஒரு குவின்டாலுக்கு இதர பொருள்கள் கலப்பு 0.10 சதவீதம், இதர தானியங்கள் கலப்பு 0.1 சதவீதம், சேதமடைந்த பருப்புகள் 0.5 சதவீதம், முதிா்வடையாத மற்றும் சுருங்கிய பருப்புகள் 0.5 சதவீதம், வண்டு தாக்கிய பருப்புகள் 2 சதவீதம், ஈரப்பதம் 10 சதவீதம் என்ற அளவில் இருக்கலாம்.
கொள்முதல் செய்யப்படும் உளுந்துக்கான தொகை, விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், நிலச்சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களுடன், சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி பதிவு செய்து கொள்ளவேண்டும்.
இது தொடா்பான கூடுதல் தகவல் பெற, திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளரை 99409-25095 என்ற எண்ணிலும், பழனி விற்பனைக் கூட கண்காணிப்பாளரை 86108-85187 என்ற எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.