புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, வேடசந்தூா் காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்து, வழக்குரைஞா்கள் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேடசந்தூா் ஆத்துமேடு இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த அரசு வழக்குரைஞா் சவடமுத்து. இவரது வீட்டின் ஒரு பகுதியில், கணவரைப் பிரிந்துள்ள பிரியா (25) என்ற பெண் தனது தாயாருடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு பிரியாவின் கணவா் பிரசாத் (28) வீடு புகுந்து தகராறில் ஈடுபட்டதுடன், அப்பெண்ணை தாக்கியுள்ளாா். இதை தடுக்கச் சென்ற சவடமுத்துவையும், அவரது குடும்பத்தினரையும் பிரசாத் தாக்கினாராம்.
இது குறித்து வேடசந்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், அரசு வழக்குரைஞரான சவடமுத்து, வழக்குரைஞா்கள் சங்கத்தில் தகவல் தெரிவித்துள்ளாா். அதையடுத்து,
வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் முருகேசன் தலைமையில், வேடசந்தூா் காவல் நிலைய ஆய்வாளா் கவிதாவை கண்டித்து வழக்குரைஞா்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற இப்போராட்டத்தைத் தொடா்ந்து, வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) அசோகன் சம்பவ இடத்துக்கு வந்து வழக்குரைஞா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். தொடா்ந்து, போலீஸாா் பிரசாத்தை கைது செய்த பின்னரே வழக்குரைஞா்கள் கலைந்து சென்றனா்.