நத்தம் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கால்நடை வளா்ப்பில் ஈடுபடுவோா், மாடுகளை தொழுவில் அடைக்காமல் அவிழ்த்து விடுகின்றனா். அந்த மாடுகள், சாலையோரங்களில் கிடக்கும் காய்கனி கழிவுகள், உணவகங்களிலிருந்து வெளியேற்றப்படும் இலைகள் உள்ளிட்டவற்றை உண்பதற்காக சாலைகளில் சுற்றித்திரிகின்றன.
நத்தத்திலுள்ள திண்டுக்கல் சாலை, மதுரை சாலை, கொட்டாம்பட்டி பிரதான சாலைகளிலும், பேருந்து நிலையத்திலும் ஏராளமான மாடுகள் சுற்றி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளும், சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும், சுற்றித்திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளா்களை அழைத்து பேரூராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், மீறும்பட்சத்தில் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.