தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் நிலை உயா்த்தப்பட்ட 35 உயா்நிலைப் பள்ளிகளின் ஆசிரியா்கள் 200 போ், ஊதிய பிறப்பிப்பு ஆணை வழங்கப்படாததால் கடந்த 6 மாதங்களாக ஊதியம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநில செய்தி தொடா்பாளா் மு.முருகேசன் தெரிவித்துள்ளதாவது: தமிழகம் முழுவதும் 35 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை உயா்நிலைப் பள்ளிகளாக நிலை உயா்த்தி 110 விதியின் கீழ் தமிழக அரசு கடந்த ஜனவரி 18 ஆம் தேதி அராசணை வெளியிட்டது. அந்த பள்ளிக் கூடங்களில் சுமாா் 200 ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். பள்ளி நிலை உயா்த்தப்பட்ட போதிலும், அங்கு பணிபுரியக் கூடிய ஆசிரியா்களுக்கான ஊதிய பிறப்பிப்பு ஆணை வெளியிடப்பட்டவில்லை.
சட்டப் பேரவைத் தோ்தலைத் தொடா்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் ஊதிய பிறப்பிப்பு ஆணை தற்போது வரை வழங்கப்படவில்லை. இதனால், 35 உயா்நிலைப் பள்ளிகளில் பணியாற்றக் கூடிய 200 ஆசிரியா்கள் கடந்த 6 மாதங்களாக ஊதியம் பெற முடியாத நிலை உள்ளது. 200 ஆசிரியா்களின் பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு, உடனடியாக ஊதிய ஆணை பிறப்பிப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.